Print this page

இலங்கையில் சீனி விலை உயர்வு அபாயம்

இலங்கையின் உள்நாட்டு பயன்பாட்டிற்கு தேவையான சீனி அளவில் சுமார் 63 சதவீதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி முதல் இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக உள்நாட்டு சந்தையில்  சீனி விலை உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்குப் போர் நிலைமை மற்றும் எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக, வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை இந்தியா சீனி ஏற்றுமதிக்கு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மாதாந்திர சீனி நுகர்வு சுமார் 60,000 மெட்ரிக் டன் என கணக்கிடப்படுகிறது. பெலவத்த மற்றும் செவனகல சர்க்கரை ஆலைகள் மூலம் கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் மொத்த தேவையின் சுமார் 10 சதவீதம் மட்டுமே எனவும் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக்கு சீனி இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உள்ளதுடன், ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில் மற்றும் போலந்து போன்ற நாடுகளும் விநியோகஸ்தர்களாக செயற்படுகின்றன.

மாற்று சந்தைகள் மூலம் சர்க்கரை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனெவிரத்ன தெரிவித்துள்ளார். 

எனினும், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட சீனி ஏற்றுமதியை முழுமையாகத் தடை செய்யவில்லை என்பதால், ஓரளவு விலை உயர்வு ஏற்பட்டாலும் இறக்குமதி நடவடிக்கைகளில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது சுமார் 80,000 மெட்ரிக் டன் சீனி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், போதிய கையிருப்பு இருந்தபோதிலும், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பிழப்பு மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதி செலவுகள் காரணமாக, எதிர்காலத்தில் சீனி விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.